துபாய் ஈழ உறவுகளுக்கு மாற்றுடைகள், மருத்துவ பொருட்களை வழங்கியது: தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.

துபாயில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அகதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ உறவுகளுக்கு மாற்றுடைகள், மருத்துவ பொருட்களை கொடுத்துதவியது தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
உலகினில் பல தொண்டமைப்புக்கள் இருந்தும் துபாயில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ உறவுகளுக்கு உதவிட பல வழிகளில் முயன்றும் இன்று வரை அந்த அமைப்புக்களால் உதவிட முடியவில்லை. அவ்வாறு உதவிட முன் வந்த போதும் அங்குள்ள அதிகாரிகள் அந்த உதவிகளை அங்குள்ள உறவுகளுக்கு வழங்கிட ஒரு போதும் அனுமதித்ததும் இல்லை!
இதனால், அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ உறவுகளும்… அந்த உறவுகளில் ஒருவரான ஐந்து வயது குழந்தை தரணிகாவும் மருத்துவ உதவிகளின்றி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். தரணிகாவிற்கு சிறுநீர் தொற்று வியாதி இருந்தும் அதற்குரிய முறையான சிகிச்சைகளின்றி அந்தக் குழந்தையோடு அங்குள்ள முதியவர் வரை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மாற்றுடை கூட இல்லாமல் மக்கிப் போன கிழிந்த உடைகளையே அணிந்து தமது மானத்தைக் காப்பாற்றி வலிகளோடு வாழ்ந்து வந்தனர். இதை அறிந்த தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் துபாய் தேசத்திற்கான ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிராஜா அவர்கள் தனது ஆணையத்தின் முக்கிய பிரதிநிதிகளான திரு. செந்தில், திரு. கார்த்திக் மற்றும் திரு. வாசு சாமிநாதன் ஆகியோருடன் உடனடியாக உதவிட முன் வந்தார்.
யாருமே உதவிட முடியாமல் போன அந்த ஈழ உறவுகளுக்கு தனது தனிப்பட்ட அதீதமான முயற்சியால் உடனடியாக மருத்துவப் பொருட்கள், மாற்றுடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கடந்த 24-04-2014 அன்று தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் சார்பாக கொடுத்தனுப்பி அந்த ஈழ உறவுகளுக்கு கிடைக்கும்படியும் செய்துவிட்டார். ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மருத்துவ வசதிகள் ஏதும் கிடைக்காத அந்த ஈழ உறவுகளும் ஆணையத்தின் அதிரடியான உதவியினால் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர் .

தமிழ்நாட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளுக்கும் ஆணையம் உதவியது.
அத்தோடு நின்று விடாமல் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டிருக்கும், திருச்சி சிறப்பு முகாமைச் சேர்ந்த இரண்டு  ஈழத்து உறவுகளின் வழக்குச் செலவிற்கும் இந்தியப்பணம் முப்பதாயிரம் ரூபாய்களை (30,000) TPRRC யின் துபாய் தேசத்தின் செயலாளர் திரு. மதி மதுசன் அவர்களும் நோர்வேயைச் சேர்ந்த திரு. ஆனந்தன் அவர்களும் கூட்டாக வழங்கி உதவினார்கள்.  உதவியினை பெற்றுக்கொண்டவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர் .
தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் சேவைகளானது ஆணையம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்  சுயதொழில் வேலைவாய்ப்புக்களுக்காக பல உதவிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
                                      "அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"
இச்செய்தின் இணைய வடிவம்:

0 comments:

Post a Comment